சிறிலங்காவில் சீன இராணுவ உயர் அதிகாரிகள் குழு
சீன படை உயர் அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, படை அதிகாரிகளே கல்வி மற்றும் ஆய்வுப் பயணமாக சிறிலங்காவுக்கு வந்துள்ளனர்.
மேஜர் ஜெனரல் வூ சுலி தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு மேஜர் ஜெனரல்கள் மற்றும் 40 மூத்த கேணல் நிலை அதிகாரிகள் என, மொத்தம் 46 படை உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள், சிறிலங்கா இராணுவத்தின் மேற்கு படைகளின் தலைமையகத்தின், தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் படைப்பிரிவின் ரெஜிமென்ட் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.