சீன நிறுவனத்தின் நிபந்தனைகளை சிறிலங்கா நிராகரிப்பு
அம்பாந்தோட்டை – மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினால் பரிந்துரைக்கப்பட்ட தரப்பின், நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடனை அடைப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்துடன், மத்தல விமான நிலையத்தையும், குத்தகை அடிப்படையில் உரிமை மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்கு முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடனை இதன் மூலம் அடைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மத்தல விமான நிலைய உரிமையை வாங்குவதற்காக சீன அரசாங்கத்தினால், பரிந்துரைக்கப்பட்ட தரப்பின் நிபந்தனைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அமைச்சரவையில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய தரப்பு ஒன்று பரிந்துரைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.