இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்கா பயணம்
இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் வியாழக்கிழமை வரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார் என்று புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியக் கடற்படைத் தளபதியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பிரமுகர்களையும் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா சந்திக்கவுள்ளார்.
அத்துடன் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள இரண்டு நாள் கடல் பாதுகாப்புக் கருத்தரங்கான காலி கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.