தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன
தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.
பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும், வீடுகளிலும் மாவீரர்களுக்கு சற்று முன்னர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.
இன்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து, அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதையடுத்து, 6.07 மணியளவில் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும், ஒரே நேரத்தில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
தமிழர் தாயகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றன.
வன்னிவிளாங்குளம்
கனகபுரம்
மட்டக்களப்பு
திருகோணமலை
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களிலும், மன்னாரில் பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டி வெளி துயிலுமில்லங்களிலும், யாழ்ப்பாணத்தில் சாட்டி, உடுத்துறை துயிலுமில்லங்களிலும், முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்திலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாவீரர்களின் பெற்றோர் உணர்வுடன் ஒன்று கூடி சுடர்களை ஏற்றினர். இங்கு பிரதான சுடரை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றிவைத்தார்.
வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா பிரதான சுடரை ஏற்றினார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சி பணியகத்தில் நடந்த நிகழ்வில், மாவீரர்கள் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன், சிறிநேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.
திருகோணமலை சிவன்கோவிலடியில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் நடந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றி வைத்தனர்.