சிறிலங்காவின் மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க மரைன் படையினர் பயிற்சி
சிறிலங்கா கடற்படையினால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க கடற்படையின் மரைன் படையினர் பயிற்சி அளிப்பதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று தொடக்கம் வரும் 25ஆம் நாள் வரை இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது.
அமெரிக்க கடற்படையின், 11 ஆவது மரைன் நடவடிக்கை அணியுடன் திருகோணமலை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் சோமசெற் என்ற ஈரூடக போக்குவரத்துக் கப்பல் நேற்று வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினரும், கடற்படை மாலுமிகளும், சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
Theater Security Cooperation திட்டத்தின் கீழ் இந்த கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது.
இந்த பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம், அடிப்படை தற்காப்பு தந்திரங்கள், போரில் உயிர் காப்புப் பயிற்சிகள், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல், விமானங்களுக்கு பயிற்றுவித்தல், சிறிய படகு மற்றும் தொடரணி நடவடிக்கைகள், தலைமைத்துவ பயிற்சி வகுப்புகளை உள்ளடக்கியதாகும்.
சிறிலங்கா கடற்படையில் ஆறு மாதங்களுக்கு முன்னரே மரைன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டதாகவும், உள்ளூரில் பயிற்றுவிக்கப்பட்ட இந்த படைப்பிரிவு, சிறிலங்கா கடற்படையினரைக் கொண்டே உருவாக்கப்பட்டது என்றும் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.