மேலும்

சித்திரவதை செய்யப்பட்ட கனடியத் தமிழருக்கு இழப்பீடு – சிறிலங்காவுக்கு ஐ.நா குழு உத்தரவு

roy-samathanamகனடாவில் இருந்து சிறிலங்காவுக்கு சென்ற போது, கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு உத்தரவிட்டுள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் றோய் சமாதானம் என்ற கனடியத் தமிழர் சிறிலங்காவில் தாம் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு, குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து கனடாவில் புகலிடம் தேடிய றோய்  சமாதானம் (வயது 46) 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்காக சிறிலங்கா சென்றிருந்தார்.

அப்போது இவரது வீட்டைச் சோதனையிட்ட காவல்துறையினர் 600 கைபேசிகளைக் கைப்பற்றியிருந்தனர். நண்பர் ஒருவரின் வர்த்தகத்துக்கு உதவும் நோக்கில் அவை சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

இதனை வைத்திருந்ததற்காக, சிறிலங்கா காவல்துறையினர் இலஞ்சம் கோரிய போது அதற்கு றோய் சமாதானம் உடன்பட மறுத்தார்.

இதனால் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்ட இவர், கனடியப் புலி என்று முத்திரை குத்தப்பட்டு தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டார் என்று கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட இவர், ஆரம்பத்தில் புலிகளுக்காக உயர்வலு தொலைத்தொடர்பு சாதனங்களையும் ரேடர்களையும் இறக்குமதி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார்.

பின்னர், முக்கிய பிரமுகர் ஒருவரைப் படுகொலை செய்ய முயன்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். ஆனால் இவையனைத்தும் பொய்யாகும்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இவர் நிலத்தில் படுக்க வைத்து துப்பாக்கியால் தாக்கப்பட்டார். குழாய்களால் தாக்கப்பட்டார். மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிடின், மனைவியைக் கைது செய்து, வன்புணர்வுக்கு உட்படுத்துவோம் என்று மிரட்டப்பட்டார்.

இறுதியில் இலத்திரனியல் கருவியை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு, நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்தி விட்டு விடுதலையானார்.

2011ஆம் ஆண்டு கனடா திரும்பிய றோய் சமாதானம், கனடிய நாடாளுமன்றத்தினள் அனைத்துலக மனித உரிமைகளுக்கான உபகுழுவின் முன்பாக சாட்சியமளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *