பிரிகேடியர் சாலியின் இடமாற்றம் இராணுவத்தின் உள் விவகாரம் – கருணாசேன ஹெற்றியாராச்சி
ஆவா குழு விவகாரத்துக்கும், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலி இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“பிரிகேடியர் சுரேஸ் சாலியின் இடமாற்றத்தை தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம்.
உண்மையைச் சிதைக்கும் வகையிலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கிலும், குறிப்பாக சமூக ஊடகங்கள் இந்த இடமாற்றத்தை தவறாக அர்த்தப்படுத்தி வருகின்றன.
இது இராணுவத்துக்குள் நடக்கின்ற வழக்கமான ஒரு இடமாற்றம்.பிரிகேடியர் சாலி ஏனைய அதிகாரிகளுடன் சேர்த்து இராணுவத் தளபதியினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தில் இருந்து இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இதுபோன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகாரிகள் காலத்துக்குக் காலம் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இது இராணுவத்தின் உள்விவகாரம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.