அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி – ஹிலாரி அதிர்ச்சித் தோல்வி
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட- ஜனநாயக கட்சியின் வேட்பாளரான முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி கிளின்டன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய போதிலும், அவர் இந்த தேர்தலில் தோல்வி கண்டிருப்பது உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில், 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
எனினும், டொனால்ட் ட்ரம்ப், 278 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். அவர் மொத்தமுள்ள 50 மாநிலங்களில் முக்கியமான 28 மாநிலங்களில் வெற்றியைப் பெற்றதன் மூலம், தனது அதிபர் பதவியை உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஹிலாரி கிளின்டனுக்கு, 218 தேர்தல் கல்லூரி வாக்குகள் கிடைத்துள்ளன. இன்னமும் சில மாநிலங்களின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டியுள்ளது.
இதுவரையில் டொனால்ட் ட்ரம்ப் 5,78,00,734 வாக்குகளையும் (48 வீதம்), ஹிலாரி கிளின்டன் 5,71,54,345 வாக்குகளையும் (47 வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கடந்த இரண்டு முறை ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா அதிபர் தேர்தல்களில் வெற்றியீட்டிய நிலையில் இம்முறை மீண்டும் அதிபர் பதவியை குடியரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையிலும் குடியரசுக் கட்சியே பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.