பிரகீத் கடத்தல் வழக்கில் கைதான அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவம் தொடர்பான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு லெப்.கேணல்கள் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் இருவர் கடந்த மே மாதமும், நால்வர் செப்ரெம்பர் மாதமும், மேலும் இருவர் கடந்த ஒக்ரோபர் மாதமும் அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் எஞ்சியிருந்த இரண்டு சந்தேக நபர்களான புலனாய்வு அதிகாரிகளும் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அண்மையில் சிறிலங்கா அதிபர் பகிரங்கமாக கூறிய பின்னர், இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபர்களான புலனாய்வு அதிகாரிகள் நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.