இராணுவம் பாடசாலைகளை நடத்தவில்லை – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் வடக்கு ஆளுனர்
வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எந்தப் பாடசாலையையும் நடத்தவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாலர் பாடசாலைகளை சிறிலங்கா படையினர் நடத்துவது குறித்து முறையிட்டிருந்தார்.
இதுகுறித்து நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வடமாகாண ஆளுனரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஆளுனர், வடக்கில் இராணுவம் சில பாடசாலைகளை மீளமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்தப் பாடசாலைகள் மாகாண நிர்வாகத்திடமே கையளிக்கப்பட்டன.
எந்தப் பாடசாலையையும் இராணுவம் நடத்தவில்லை.
எனினும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர், முன்பள்ளி ஆசிரியர்களாக சிறிலங்கா இராணுவத்தினரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்பள்ளிகள் மாகாணசபையின் நிர்வாகத்தில் இருந்தாலும், கூட இராணுவம் இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், தமிழ் இளையோர் வேலையின்றி இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது விச ஊசி போடப்பட்டதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னர் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு அவரால் இதுவரை எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை.
அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர், ஒரு தலைவர் அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.