சிங்கள ஜூரிகளின் கையில் ரவிராஜ் கொலை வழக்கு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிங்கள முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கை சிங்கள ஜூரிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அதனைப் பொருட்படுத்தாமல், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யாலங்கார, இந்த வழக்கை சிங்கள ஜூரிகள் சபை முன் விசாரிக்க நேற்று உத்தரவிட்டார்.
இதற்கமைய, வரும் 21ஆம் நாள் தொடக்கம் இந்த வழக்கின் வாதங்கள் நாளாந்தம் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை -குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 இராணுவத்தினருக்கு எதிராக படுகொலைகளை நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்திருந்த போதிலும், இதுபோன்ற ஜூரிகள் சபை ஒன்று அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில், இராணுவத்தினரை விடுவித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.