ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபையிடம் – கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை சிறப்பு ஜூரிகள் சபை முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இந்த வழக்கை ஜூரிகள் சபை முன் விசாரிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதிலும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யதிலக சிறப்பு ஜூரிகள் சபை முன் வழக்கை விசாரிக்க நேற்று அனுமதி அளித்தார்.
அதேவேளை, சிங்கள ஜூரிகள் முன்னிலையிலேயே விசாரணை நடக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மூவரும் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
வரும் 31ஆம் நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, ஜூரிகள் சபை எவ்வாறு அமைக்கப்படும் என்று நீதிபதி அறிவிப்பார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஜூரிகள் சபை முன் விசாரிக்க முடியாது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர் தவராசா வாதிட்டிருந்தார்.
எனினும், ஜூரிகள் சபை முன் விசாரணையை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து அவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.