சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உபய மெடவெல நியமனம்
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உபய மெடவெல நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் நொவம்பர் முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் பாதுகாப்பு அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிசும், பிரதித் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சுமேத பேரேராவும் ஓய்வு பெற்றதையடுத்தே, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை அடுத்து, மேஜர் ஜெனரல் உபய மெடவெல, மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மேஜர் ஜெனரல் உபுல் விதானகே, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் மூப்பு வரிசையில் உள்ளனர்.
இவர்களில் மேஜர் ஜெனரல் உபய மெடவெல வரும் டிசெம்பரிலும், மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக அடுத்த ஆண்டு மார்ச் மாதமும், 55 வயதை எட்டுவதால், சேவை நீடிப்பு வழங்கப்படாது போனால், ஓய்வு பெற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.