பாதயாத்திரைக்கான இறுதிக்கட்டத் தயார்படுத்தலில் மகிந்த அணி
ஜன சட்டன என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாளை ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான, இறுதிக்கட்டக் கலந்துரையாடலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று இரவு கண்டியில் நடத்தவுள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டி தலதா மாளிகையில் வழிபாடு மேற்கொள்ளவுள்ளார்.
இதையடுத்து, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இறுதிக்கட்ட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கும் இந்தக் கலந்துரையாடலில், கூட்டு எதிரணியின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பர் என்று கூறப்படுகிறது.
நாளை ஆரம்பித்து கொழும்பு நோக்கி 5 நாட்கள் நடத்தப்படவுள்ள இந்தப் பாத யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.
அத்துடன் பாதயாத்திரையைக் குழப்புவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதனைக் கையாளுவது எப்படி என்றும் ஆலோசிக்கப்படவுள்ளது.
அதேவேளை, இந்தப் பாதயாத்திரையில், கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
எனினும், இந்தப் பாதயாத்திரையில், ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.