நேற்றுமாலை கொழும்புத் துறைமுகம் வந்தது அமெரிக்கப் போர்க்கப்பல்
அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் 13ஆவது ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த இந்த ஈரூடக போக்குவரத்து தள போர்க்கப்பல், ஒரே தடவையில் ஒரு பற்றாலியன் (700 பேர்) மரைன் படையினரையும், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டது.
நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்தப் போர்க்கப்பலில், சிறிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் உள்ளன.
இந்தப் போர்க்கப்பலில் வந்துள்ள அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினர் 200 பேருக்கு மனிதாபிமான மற்றும் அனர்த்தகால உதவிப்பணிகள் தொடர்பான பயிற்சிகளை அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.