நாளை மறுநாள் ஜப்பானுக்குப் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்
ஜப்பானில் நடக்கவுள்ள ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள், ரோக்கியோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஜப்பானில் வரும், 26, 27ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் நாளை மறுநாள் கொழும்பில் இருந்து ரோக்கியோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஜி-7 மாநாட்டில் சிறிலங்காவுக்கு முன்னொரு போதும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.