மேலும் 5 சடலங்கள் இன்று மீட்பு – பலியானோர் தொகை 87 ஆக உயர்வு
கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்கவில், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்துபோன 5 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
அண்மைய இயற்கை அனர்த்தங்களால் 82 பேர் பலியானதாகவும், 118 பேர் இன்னமும் காணாமற்போயுள்ளதாகவும், இன்று காலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அரநாயக்க பகுதியில், மேலும் 5 சடலங்கள் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில், அரநாயக்கவில் 35 பேரும், புலத் கொஹுபிட்டியவில் 14 பேரும், கம்பகாவில் 8 பேரும், கொழும்பில் 5 பேரும் இயற்கை அனர்த்தங்களுக்குப் பலியாகியுள்ளனர்.