மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள, ஜெயலலிதாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ”தமிழ்நாட்டு மக்கள் உங்களின் அரசியல் மற்றும் தலைமைத்துவம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு, இந்த பெரும் வெற்றியே போதிய சாட்சியாகும்.
உங்களின் மேற்பார்வையில், சிறிலங்கா மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே, இருக்கும் பன்முக உறவுகள் தொடரும் என்பதும், புதிய வழிகளில் ஒத்துழைப்புகள் வளரும் என்பதும், எனது உண்மையான நம்பிக்கையாகும்.
2015 அதிபர் தேர்தலின் பின்னர், சிறிலங்கா மக்களால் உருவாக்கப்பட்டுள்ள புதிய சூழலில்,உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்க்கிறேன்.
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நீடித்த நல்லிணக்கம், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கவும், தனிப்பட்ட வாழ்வில், தொடர்ந்து முன்னேற்றம் காணவும், தமிழ் நாட்டு மக்களின் செழிப்புக்காகவும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.