வடக்கில் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பு – தடுப்பதற்கு ஒன்றிணையுமாறு யாழ். ஆயர் அறைகூவல்
வடக்கில், குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வன்முறைகள், மற்றும் கலாசார சீரழிவுகள் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள, யாழ். ஆயர், இந்த நிலையை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பினரும், ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மிக மோசமாக அதிகளவில் அதிகரித்துக் கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
கொலை, களவு, வாள்வெட்டு, குழுச்சண்டைகள், போதைப் பொருள் பாவனை, கலாசார சீரழிவு போன்ற பல்வேறு விடயங்களால் யாழ்.குடாநாட்டு மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதா என்கின்ற ஐயத்தை இச்சம்பவங்கள் தோற்றுவித்துள்ளன.
இது தொடர்பில் விரைந்து செயற்படவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, இந்த விடயத்தில் புத்திஜீவிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரிய தரப்பினர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முன்வருதல் அவசியமாகும்.
மேலும் குற்றச்செயல்களைத் தடுப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்விலேயே தங்கியுள்ளது. அக்கம் பக்கத்தில் இடம்பெறும் போது வெறுமனே பார்த்துக் கொண்டிராது, இது தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது.
சட்டம், ஒழுங்கை பாதுகாப்பவர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களை பிரயோகிக்க முன்வருதல் வேண்டும்.
ஒரு காலத்தில் கல்வியே எமது சொத்து எனவும் கல்வியால் மிகச் சிறந்த பிரதேசமாகவும் திகழ்ந்த யாழ்ப்பாணம் இன்று கல்வியில் கீழ்நிலைக்குச் சென்றமைக்கு இச் சமூகச் சீர்கேடுகளும் போதைப்பொருள் பாவனையுமே காரணமாய் அமைந்திருக்கும் என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை.
போர் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட அச்ச நிலையைவிட சமூகச் சீர்கேடுகள் நிகழ்கின்ற இன்றைய காலத்தில் அச்சமும் பீதியும் மக்களிடையே மிக உயர்வாகக் காணப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இச்சமுதாய அவலநிலை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அதற்குச் சமூக அக்கறை கொண்ட புத்தி ஜீவிகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் முன்வருதல் வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.