அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் முற்றாக கையளிக்கப்படாது
அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றாகவே சீனாவிடம் கையளிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களை, சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை தலைவர் தம்மிக ரணதுங்க நிராகரித்துள்ளார்.
”அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்வகிக்கும் செயற்பாட்டில் சிறிலங்காவுடன் சீனா பங்காளராகவே இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான, இருநாடுகளுக்கும் பயனுள்ள வகையிலான பொருத்தமான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, இரண்டு நாடுகளும் ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.
இதுபற்றிய கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இதற்கான உடன்பாடுகள் செய்து கொள்ளப்படும்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டுவதற்கு சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து, 1.2 பில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கடன்களின் அளவுக்கு துறைமுகத்தில் இருந்து வருவாய் கிடைக்கவில்லை“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.