கொகோஸ் தீவு வந்த சிறிலங்கா அகதிகளை இரகசியமாகத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா
சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த அகதிகள், இரவோடிரவாக இரகசியமான முறையில், விமான மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான காலநிலைக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை காலை கொகோஸ் தீவைச் சென்றடைந்த மரப்படகு ஒன்றில், சுமார் 12 அகதிகள் வரை இருந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்திருந்தனர்.
கொகோஸ் தீவில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இந்தப் படகு தரித்து நின்றது.
இந்த நிலையில், ஒரு குழந்தை உள்ளிட்ட பெண்கள், சிறுவர்கள் அடங்கலான 12 அகதிகள், விமானம் ஒன்றின் மூலம் ஏற்றி இரகசியமாக சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அகதிகள் படகில் இருந்தவர்கள், சுங்கப் பிரிவின் படகில் மாற்றப்பட்டு, தீவின் மேற்குப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜன்னல் கண்ணாடிகள் மறைக்கப்பட்ட பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இரவோடிரவாக விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றன், வாடகை விமானம் மூலம் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனரா என்பதை உறுதிப்படுத்த மறுத்துள்ளார்.
கொகோஸ் தீவுக்கு அகதிகள் படகு வந்த விவகாரத்தை அவுஸ்ரேலியா இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.