வடக்கில் பணியக உதவியாளர் பதவிக்கு 250 பட்டதாரிகள் விண்ணப்பம்
சிறிலங்காவில் வேலையற்றிருப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மாகாணசபையினால் கோரப்பட்ட பணியக உதவியாளர் பதவிக்கு, 250 பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாணசபையில் பணியக உதவியாளர்கள் பதவிக்கு உள்ள 40 வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இந்தப் பதவிக்கு, 9,460 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 250 பட்டதாரிகளும் அடங்கியுள்ளனர். இவ்வாறு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகளில் ஒருவர் பொருளியல் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் 2014ஆம் ஆண்டு 4.3 வீதமாக இருந்த வேலையின்மை, கடந்த ஆண்டில் 4.6 வீதமாக அதிகரித்துள்ளதாக, 2015ஆம் ஆண்டுக்கான சிறிலங்கா மத்திய வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.