வடமாகாணசபையின் தீர்மானம் பெறுமதியற்றது – ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்கிறது சிறிலங்கா
சமஸ்டி ஆட்சிமுறை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பெறுமானம் கிடையாது என்று, சிறிலங்காவின் கல்வி அமைச்சரும், ஐதேகவின் பிரதிப் பொதுச்செயலருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
”இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு போன்றவற்றில், வடக்கு மாகாணசபையின் சமஸ்டி தீர்மானம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இந்த தீர்மானம் சட்டரீதியான பெறுமானமற்றது. இது பயனற்றது.
சிறிலங்கா அதிபரோ, பிரதமரோ நாட்டைப் பிரிப்பதற்கு எவரையும் அனுமதிக்கமாட்டார்கள். அதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
தேசியப் பிரச்சினைக்கு, எந்த தீர்வு காண்பதானாலும், அது ஒற்றையாட்சிக்குள் தான் இருக்கும்.
வடக்கில் இராணுவ முகாமுக்குள் சம்பந்தன் நுழைந்த விவகாரத்தையும், வடக்கு மாகாண சபை விவகாரத்தையும், அரசாங்கம் கவனமாகவும் தந்திரோபாயமாகவும் கையாள்கிறது.
நாம் அவர்கள் மீது பொருத்தமான நடவடிக்கை எடுப்போம். அதேவேளை போலி நாட்டுப் பற்றாளர்களின் பொறியில் சிக்கிவிட மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.