பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் கைச்சாத்து
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் நேற்று கையெழுத்திட்டன. புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்துலக உடன்பாடு நேற்று நியூயோர்க்கில் கையெழுத்திடப்பட்டது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தமது நாடுகளின் சார்பில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
சிறிலங்காவின் சார்பில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
முன்னதாக, இந்த மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்காவின் சார்பில், இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, பேரக் குழந்தையை மடியில் அமரவைத்தபடி, இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில், எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும் நடவடிக்கை என்பதைக் குறிக்கும் வகையில் சிறுவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில் பாரிசில் கூடிய உலகத் தலைவர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள இணங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.