ஆழ்கடல் கண்காணிப்பு – வெளிநாடுகளின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்துகிறது சிறிலங்கா
மாலைதீவுக்கும், மலாக்கா நீரிணைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை பாதுகாப்பான கடற்பாதையாக மாற்றும், சிறிலங்கா கடற்படையின் சிறப்புத் திட்டத்தை செயற்படுத்த பல்வேறு நாடுகளின் உதவியை சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்ளவுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளுக்குள், மாலைதீவுக்கும், மலாக்கா நீரிணைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து விடுவித்து, பாதுகாப்பான கடற்பாதையாக மாற்றும் செயற்திட்டத்தை சிறிலங்கா கடற்படை நடைமுறைப்படுத்தவுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவில் இந்த திட்டத்தை சிறிலங்கா கடற்படை செயற்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்துக்குத் தேவைப்படும், இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளை இந்தியாவிடம் சிறிலங்கா கடற்படை வாங்கவுள்ளது.
அத்துடன், அமெரிக்கா, ரஸ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்தும் உதவிகளைப் பெற்றுக் கொள்ள சிறிலங்கா கடற்படை திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான பயிற்சிகளை சிறிலங்கா கடற்படை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
சுரனிமல என்ற அதிவேக ஏவுகணைக் கப்பல், மற்றும் சக்தி என்ற துருப்புக்காவி கப்பல் என்பன, மாலைதீவில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
அதேவேளை, சமுத்திர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
பிராந்தியக் கடற்படைகளிடம் இருந்து தாடர்ந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.