இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதில் சிறிலங்கா, எகிப்து ஆர்வம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதில், சிறிலங்காவும், எகிப்தும் ஆர்வம்காட்டி வருவதாக, பிரிஐ செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா அண்மையில் நிராகரித்ததுடன், பிரான்சிடம் இருந்து 24 ராபல் போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் எகிப்து கையெழுத்திட்டது.
இந்த இரண்டு நாடுகளும் இப்போது, தேஜஸ் போர் விமானத்தின் தற்போதைய வடிவத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
எனினும், தேஜஸ் போர் விமானங்களைத் தயாரிக்கும், இந்திய அரசுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநொட்டிக்ஸ் நிறுவனம், முதலில் இந்திய விமானப்படைக்கு இந்த விமானத்தை விநியோகிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
‘எமது விமானங்கள் மீது ஏனைய நாடுகள் ஆர்வம் காட்டினாலும், இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களைத் தயாரித்துக் கொடுப்பதிலேயே முதலில் கவனம் செலுத்தி வருவதாக ஹிந்துஸ்தான் ஏரோநொட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்வர்ண ராஜு தெரிவித்துள்ளார்.
எமது விமானப்படை மகத்தானமாகப் பறக்கும் போது, ஏனையவர்களுக்கு நம்பிக்கை வரும். எனவே முதலில், இந்திய விமானப்படையின் குறைந்தபட்ச ஆரம்பத் தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, தேஜஸ் விமானங்களை வாங்குவதற்கு எந்தெந்த நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
ஆனால், சிறிலங்காவும், எகிப்தும், மட்டும் இப்போது இந்த விமானங்களை வாங்க விருப்பம் கொண்டிருப்பதாக, பாதுகாப்பு வட்டாரங்கள், தெரிவித்துள்ளன.