ஜப்பானில் ஒபாமாவைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஒழுங்குபடுத்தும், இராஜதந்திர முயற்சிகள், கொழும்பிலும், வொசிங்டனிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் நடக்கவுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளின் (ஜி-7) மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அடுத்த மாதம் 26, 27ஆம் நாள்களில், ஜப்பானின் ஷிமா நகரில், ஜ-7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வியட்நாம் பிரதமர் ஆகியோருக்கு ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி-7 மாநாட்டுக்குச் செல்லும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 71 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்கு இலக்காகி அழிந்த ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களுக்கும் செல்லவுள்ளார்.
இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட இந்த நகரங்களுக்கு அமெரிக்க அதிபர்கள் எவரும் இதுவரை சென்றதில்லை என்பதுடன், இந்த தாக்குதலுக்காக மன்னிப்பும் கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களுக்கும் செல்லக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.