பிரகீத் கடத்தல் முக்கிய சந்தேகநபரான லெப்.கேணல் கொழும்பு மருத்துவமனையில் அனுமதி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் சம்மி குமாரரத்ன நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த கிரித்தல இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தவரே லெப்.கேணல் சம்மி குமாரரத்ன.
இந்த வழக்கில், முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்பது மாதங்களாக இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். எனினும், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையிலேயே இவர் தங்கியிருந்தார்.
இவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, சிறைச்சாலை மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவசரமாக அவர் கடந்த சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆறு பேர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.