அடுத்த அரச எதிர்ப்புப் பேரணி – மகிந்தவுடன் செவ்வாயன்று ஆராயவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகள்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய, கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வரும் செவ்வாய்கிழமை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரான முதலாவது பாரிய பேரணியை மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சிகள் நேற்றுமுன்தினம் நடத்தியிருந்தன.
அடுத்த அரச எதிர்ப்புப் பேரணியை எங்கே, எப்போது நடத்துவது என்று வரும் செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுடன் நடக்கவுள்ள பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.
தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர், அடுத்த அரச எதிர்ப்புப் பேரணியை நடத்த வேண்டும் என்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, ஹைட் பார்க்கில் நடத்தப்பட்ட பேரணி வெற்றியைத் தந்துள்ளதால், சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக, அடுத்த பேரணியை நடத்த வேண்டும் என்று வேறு சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவுடன் நடத்தவுள்ள கலந்துரையாடலில் அடுத்த பேரணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.