தென்கொரியா செல்கிறார் மங்கள- அரசியல், பொருளாதார உறவுகளை வலுப்படுத்த முயற்சி
அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா- தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு நடத்தவுள்ளனர்.
தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யுன் யங்– சே யை நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தப் பேச்சுகளில், இருநாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார, தொழிலாளர் விவகாரம், அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் தலதா அத்துகோரளவும் பங்கேற்கவுள்ளார்.
இன்று தென்கொரியா செல்லும் மங்கள சமரவீர மூன்று நாட்கள் சியோலில் தங்கியிருந்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தென்கொரியா செல்வது இதுவே முதல்முறையாகும்.
சிறிலங்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.
2014ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலா வர்த்தகம், 407 மில்லியன் ரூபாவாக இருந்தது.
314 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடைகள், உருக்கு, மற்றும் இரசாயன இயந்திரங்களை சிறிலங்காவுக்கு தென்கொரியா ஏற்றுமதி செய்திருந்தது.
அதேவேளை, 93 மில்லியன் டொலர் பெறுமதியான கனிமப் பொருட்களையும், ஆடைகளையும் சிறிலங்கா இறக்குமதி செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.