சிறிலங்காவின் மற்றொரு அமைச்சர் மட்டக்குழு சீனா பயணம் – உறவுகளைப் பலப்படுத்த முயற்சி
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவின் அமைச்சர் மட்டக் குழுவொன்று பீஜீங் சென்றுள்ளது.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தலைமையிலான குழுவே சீன அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக நேற்றிரவு பீஜிங் புறப்பட்டுச் சென்றுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரிலும், சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலுமே இந்தக் குழு பீஜிங் சென்றிருப்பதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகளை முன்னகர்த்துவது தொடர்பாக இந்த குழு கவனம் செலுத்தவுள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்தக் குழு கவனம் செலுத்தவுள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லவுள்ள நிலையில் சிறிலங்கா குழுவினர் பீஜிங் சென்றுள்ளனர்.
ஏற்கனவே சிறிலங்காவின் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த மாதம் முதல் வாரத்தில் சீனா சென்று பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.