சிறிலங்காவில் 3 குடிநீர் திட்டங்களுக்கு இந்தியா 400 மில்லியன் டொலர் கடனுதவி
சிறிலங்காவில் மூன்று குடிநீர் விநியோகத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 400 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதுதொடர்பான உடன்பாடு நேற்று இந்தியாவின் எக்சிம் வங்கிக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
சிறிலங்காவின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு உதவியளிப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இந்த கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது.
400 மில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று குடிநீர் விநியோகத் திட்டங்களின் மூலம் பத்து இலட்சம் மக்கள் பயனடைவர் என்று சிறிலங்காவின் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டிய இந்தக் கடனுக்கு, 1.75 வீத வட்டி அறவிடப்படும்.
வரையறுக்கப்பட்ட காலஎல்லைக்குள், இந்த மூன்று குடிநீர் விநியோகத் திட்டங்களையும் இந்திய நிறுவனங்களே மேற்கொள்ளவுள்ளன.