சிறிலங்கா பிரதமர், அமைச்சர்களுடன் அமெரிக்க உயர் அதிகாரி பேச்சு
அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாகவும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும்,சிறிலங்கா பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அடிநிலைச் செயலர் பற்றிக் கென்னடி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களில், அமெரிக்க- சிறிலங்கா உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க- சிறிலங்கா இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகளுடன், பற்றிக் கென்னடி பேச்சு நடத்தியுள்ளார்.
துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.