அனைத்துலக செஞ்சிலுவை சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிறிலங்கா வருகிறார்
அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எல்ஹாட்ஜ் அஸ் சை மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது அவர் வடக்கில் சிறிலங்கா செஞ்சிலுவை சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் போருக்குப் பிந்திய மீளமைப்புத் திட்டங்களைப் பார்வையிடவுள்ளார்.
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 21 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளையும், அவர்களின் வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கும், அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளம், மற்றும் இந்திய அரசாங்கம் உளள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள கொடையாளர்களின் உதவியுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் போருக்குப் பிந்திய மீளமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எல்ஹாட்ஜ் அஸ் சை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டு, இந்த உதவியைப் பெற்றுள்ள குடும்பங்களையும், திட்டப் பணியுடன் தொடர்புடைய பணியாளர்களையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏனைய முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.