சிறிலங்கா பயணம் குறித்து 31ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மௌனம்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நிகழ்த்திய உரையில் எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்ராட் அல் ஹுசேன் தொடக்கவுரை நிகழ்த்தியிருந்தார்.
இதில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து அவர் குறிப்பிட்டிருந்த போதும், சிறிலங்கா தொடர்பாக எதையும் சுட்டிக்காட்டவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அண்மையில் சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
எனவே, அவர் இன்றைய உரையில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பான விபரங்களை வெளியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதுதொடர்பாக மௌனம் காத்துள்ளார்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா குறித்த விவாதங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.