முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்
வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது.
பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ்.வணிகர் கழகம் என்பனவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
சில இடங்களில் மாத்திரம், மருந்துக்கடைகளும், உணவகங்களும், திறந்திருந்தன. பெரும்பாலான வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.
தனியார் பேருந்துச் சேவை முற்றாக முடங்கியிருந்தது. அரச பேருந்துகள் ஆங்காங்கே மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபட்டன. பாடசாலை மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தினால், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டது.