ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கை அதிகரிப்பது குறித்து சமந்தா பவருடன் மங்கள பேச்சு
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தினார்.
நியூயோர்க்கில் நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கை விரிவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும், சமந்தா பவருக்கு, மங்கள சமரவீர விளக்கிக் கூறியுள்ளார்.
அதேவேளை, நியூயோர்க்கில் தங்கியுள்ள மங்கள சமரவீர, அங்குள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரையும் சந்தித்து, சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் தொடர்பாக எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகிறது.
நாளை, அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில், நடைபெறவுள்ள கருத்தரங்கில் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.