மேலும்

சரத் பொன்சேகாவின் நியமனத்துக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு

sarath-fonsekaதேசியப் பட்டியல் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இந்த மனுவை இன்று தாக்கல் செய்தது.

2015ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவின் மாவட்ட வேட்பாளர்  பட்டியல்களிலோ, தேசியப்பட்டியலிலோ இடம்பெறாத, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை, அரசியலமைப்பின் 99 (அ) பிரிவை மீறுகின்ற செயல் என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நியமனம், சிறிலங்கா மக்களுக்கு அரசியலமைப்பின் 10, 12(1), 14,(3) பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களின் அடிப்படையில் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் நியமனத்துக்கு எதிரான உத்தரவைப் பிறப்பிக்குமாறும், இந்த மனு மீதான தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும், மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம், சரத் பொன்சேகா, சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்றச் செயலர் தம்மிக திசநாயக்க,  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட எட்டுப் பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *