யோசிதவைப் பிணையில் விடுவிக்கும் முயற்சி தோல்வி – ஏமாற்றத்துடன் திரும்பிய மகிந்த
சிஎஸ்என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.யோசித ராஜபக்சவை , கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணையில் விடுவிக்க மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.
கடுவெல நீதிமன்றத்தினால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்குமாறு, அவரது சட்டவாளர்கள் முன்வைத்த கோரிக்கை, ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தப் பிணை மனு மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்று காலை இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஹெரியந்துவவினால் விசாரிக்கப்பட்ட போதும், யோசித ராஜபக்சவுக்கு பிணை வழங்குவது பற்றிய எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், மனுதாரர்களின் தரப்பு நியாயங்களையும் அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு நீதிபதி குறிப்பிட்டு விசாரணையை வரும் 29ஆம் நாள் வரைக்கும் ஒத்திவைத்தார்.
இதனால், யோசித ராஜபக்சவைப் பிணையில் விடுவிக்கும் ராஜபக்ச குடும்பத்தின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைப் பார்வையிட வந்திருந்த மகிந்த ராஜபக்ச பிணை உத்தரவு கிடைக்காத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.