இந்தியாவைத் திருப்திப்படுத்த கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் – எச்சரிக்கிறார் பசில்
இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.
தொலைக்காட்சி ஒன்றுக்கு இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடனான சிறிலங்காவின் உறவுகள் உறுதியான முன்னேற்றம் கண்டுள்ளன என்பது உண்மையே.
கொழும்புத் துறைமுக விரிவாக்கத்தினால், முன்னைய அரசாங்கம் புதுடெல்லியில் கோபத்துக்கு உள்ளாக நேரிட்டது.
துறைமுக விரிவாக்கம் போன்ற முன்னைய அதிபரின் முயற்சிகளை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வெளிநாட்டு உறவுகள், தேசிய நலன்களைப் பாதிக்காது என்று முன்னைய அரசாங்கம் நம்பியது.
இந்தியாவுடன், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வது சிறிலங்காவின் நலன்களுக்கு வி்ரோதமானது.
சீபா எனப்படும் விரிவான பொருளாதார பங்காளர் உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு முன்னைய அரசாங்கத்தின் மீது இந்தியா பாரிய அழுத்தங்களை கொடுத்தது.
சீனா எனப்படுவது, இந்திய உற்பத்திகளுக்கு சந்தைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கம் கொண்டது.
இந்தியா சிறந்த பல்கலைக்கழக முறை ஒன்றை கொண்டிருக்கிறது. தனது பட்டதாரிகளுக்கு சிறிலங்காவில் இடமளிக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. முடிதிருத்துபவர்களுக்குக் கூட இடமளிக்க முனைகிறது.
சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கொள்கை நியாயமற்றது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.