இந்தியாவை பகைத்துக் கொண்டதே மகிந்தவின் தோல்விக்குக் காரணம் – என்கிறார் கோத்தா
மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்காமையும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
பொருத்தமான வெளிவிவகாரக் கொள்கையை ராஜபக்சக்கள் கொண்டிருக்காதமை, தோல்விக்கான முக்கிய காரணமா என்று கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச,
“ஆம் அது நடந்தது. வெளிவிவகாரக் கொள்கைகளில், துரதிஷ்டவசமாக இந்தியாவை எம்மால் திருப்திப்படுத்த முடியவில்லை.
சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள், நிலையான இருப்புத் தொடர்பாக இந்தியா அச்சம் கொண்டிருந்தது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு எம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்றும், சீனாவுடனான தொடர்புகள் முற்றிலும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்டது என்றும் நாம் அவர்களுக்கு உறுதியளித்திருந்தோம்.
ஆனால் இந்தியா அதனை நம்பவில்லை. அவர்கள் அதற்கும் மேலான உறவுகள் இருப்பதாக நினைத்தனர்.
புலனாய்வு பின்னணியில் இருந்து வந்தவரான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், முற்றிலுமாக சீனாவின் மீதே கவனம் செலுத்தி வந்தவர்.
சிறிலங்கா சகா என்ற வகையில், இரண்டு தடவைகள் அவரைச் சந்தித்தேன். அந்த இரண்டு இந்தச் சந்தர்ப்பங்களின் போதும், அவர் சீனாவின் தலையீடுகள் தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தினார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துமாறும், சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்கு எல்லை போடுமாறும் என்னிடம் வலியுறுத்தினார்.
30 ஆண்டுகாலப் போருக்குப் பின்னர், நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதால், நாம் அதனைச் செய்ய முடியாது என்று அவருக்கு விளக்கிக் கூறினேன்.
சீனாவிடம் இருந்து மட்டுமே எம்மால் முதலீட்டைப் பெற முடிகிறது. தற்போதைய அரசாங்கமும் கூட இறுதியில் சீனாவின் முதலீட்டைத் தான் நாடக் கூடும். துறைமுக நகரத் திட்டமும் தொடங்கப்படக் கூடும்.
அப்போது இந்த விவகாரத்தை இந்தியா மீண்டும் எழுப்பும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். இந்தியாவுடனான பிரச்சினைகளை நாம் உணரவில்லை என்பதல்ல. இது எமது நலன்களுடன் முரண்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.