சியோல் விமான நிலைய கழிவறையில் தொலைந்த கடவுச்சீட்டு – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்க்கதி
ஒன்றுகூடல் ஒன்றுக்குச் சென்றிருந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான நிலையக் கழிவறையில் தனது கடவுச்சீட்டைத் தவறவிட்டதால், தென்கொரியாவில் நடந்த, அந்த ஒன்றுகூடலின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் பங்கேற்க முடியாது போனது.
அமைதிக்கான அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தரங்கத்தில் பங்கேற்க சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் சியோல் சென்றிருந்தனர்.
சியோல் விமான நிலையத்தில் இறங்கியதும், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரோகினி விஜேரத்ன கழிவறைக்குச் சென்ற போது, தனது கடவுச்சீட்டை அங்கு தவறவிட்டிருந்தார்.
இதனால், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தென்கொரியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் உதவி கோரப்பட்டு, அங்கிருந்து வந்த அதிகாரிகள் நடத்தி்ய தேடுதலில், கடவுச்சீட்டு மீட்கப்பட்டது.
எனினும், அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடலின் ஆரம்ப நிகழ்வில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களால் பங்கேற்கமுடியவில்லை.
தென்கொரியா சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவில், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,