யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான சாரணர் ஒன்றுகூடல்
சிறிலங்காவின் அனைத்து மாவட்ட சாரணர்களும் பங்கேற்கும், ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடல் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ். மாநகரசபை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 20ஆம் நாள் தொடக்கம், 26ஆம் நாள் வரை நடக்கவுள்ள இந்த சாரணர் ஒன்று கூடலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகளாகியுள்ள நிலையில், தேசிய அளவிலான சாரணர் ஒன்றுகூடல் முதல் முறையாக வடக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஒன்றுகூடல் நட்புறவு மற்றும் புரிந்துணர்வு என்ற மகுடத்தின் கீழ் இடம்பெறவுள்ளதாகவும் இதில், சிறிலங்காவின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 8000 சாரணர்களும், அவர்களின் ஆசிரியர்களும் பங்கேற்பர் என்றும், சிறிலங்கா சாரணர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 200 வெளிநாட்டு சாரணர்கள் மற்றும் சாரணர் தலைவர்களும் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளம், இந்தியா, மலேசியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இதில் பங்கேற்பதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளன. மாலைதீவு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
எதிர்வரும் 20ஆம் நாள், சாரணர்களின் ஒன்றுகூடல் ஆரம்பமாகின்ற போதிலும், யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 22ஆம் நாள் பிற்பகல் 4 மணியளவில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அதிகாரபூர்வமாக இந்த ஒன்றுகூடல் ஆரம்பித்து வைக்கப்படும்.
வரும் 26ஆம் நாள், சான்றிதழ்கள் வழங்கலுடன் இந்த ஒன்றுகூடல் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.