மேலும்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – இந்தியாவில் ரணில் வாக்குறுதி

ranilபோர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக பங்களிப்புக்கு தமது அரசாங்கம் தயங்கவில்லை என்றும், ஆனாலும், இறுதி தீர்ப்பு உள்நாட்டு நீதிமுறைமைகளுக்கு ஏற்பவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

நேற்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரில் வழிபாடு செய்ய வந்திருந்த அவர், அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் அயல்நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட பங்கேற்க முடியும்.

பொதுமக்களின் மரணங்களுக்கு சிறிலங்கா இராணுவமா, விடுதலைப் புலிகளா பொறுப்பு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

எத்தனை பேர் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்றோ, அல்லது விடுதலைப் புலிகளால் போர் வலயத்துக்குள் தள்ளிச் செல்லப்பட்டதால், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்றோ தெளிவாகத் தெரியவில்லை.

இந்த இழப்புகளுக்கு சரியான காரணிகளைக் கண்டறிவதற்கான நிபுணத்துவம் எம்மிடம் இல்லாதிருக்கலாம்.

எனவே, இதுபோன்ற காரணிகளைக் கண்டறிவதற்கு அனைத்துலக பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.

ஆனால் மரணங்களுக்கு யார் பொறுப்பாளிகள், அவர்களுக்கு என்ன தண்டனை என்று தீர்மானிக்கும் இறுதி தீர்ப்பை அளிக்கும் உரிமை சிறிலங்காவின் நீதித்துறைக்கே இருக்கும்.

சிறிலங்காவின் நீதித்துறை முன்னர் அவமானத்துக்குரியதாகவே இருந்தது.ஆனால் இப்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.

இத்தகைய விவகாரங்களில் ஒவ்வொரு நாட்டினதும் இறைமை மதிக்கப்பட வேண்டும்.

சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் ஆசியாவிலேயே பழைமையானது. நாம் பலமானதும், சுதந்திரமானதுமான நீதித்துறையைக் கொண்டிருக்கிறோம்.

விடுதலைப் புலிகளுடனான போர்க்குற்றங்களை இழைத்த போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *