சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலைப் பதவியைப் பிடித்தார் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ்
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த டிசெம்பர் மாதம் 25ஆம் நாளுடன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து, சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.
இந்த நிலையிலேயே, புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கவசப்படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் சிறிலங்கா இராணுவத்தில் 35 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.
அதேவேளை, பிரதி இராணுவத் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது நியமனம், வரும் 16ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது. பிரதி இராணுவத் தலைமை அதிகாரியாகப் பதவி வகிக்கும் மேஜர் ஜெனரல் அம்பன்பொல அடுத்த சில நாட்களில் ஓய்வு பெறவுள்ளநிலையிலேயே இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, 35 ஆண்டுகாலம் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.