நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைச் செயலணி – இன்று முதல் செயற்படும்
நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பதற்கான பொது கலந்துரையாடல் செயல்முறைகளை முன்னெடுப்பதற்கான இணையத்தளம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று நடக்கவுள்ள நிகழ்வில் இந்த இணையத்தளத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளை அமைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.
இந்தப் பொறிமுறைகளை அமைப்பது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு, ஆலோசனைச் செயலணி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட இந்த ஆலோசனை செயலணி இன்று தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இணையத்தளம் ஊடாகவும், இணையத்தளத்தைப் பயன்படுத்த முடியாதவர்களின் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்றும் இந்தக் குழு பொதுமக்களின் கருத்துக்களைப் பெறவுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் அமைக்கப்படவுள்ள இந்த ஆலோசனைச் செயலணி சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் ஆலோசனைகளை வழங்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று செயற்படத் தொடங்கும் இந்த ஆலோசனைச் செயலணி, அடுத்த மூன்று மாதங்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும். அத்துடன், அந்த அறிக்கை பகிரங்கமாகவும் வெளியிடப்படும்.
மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான இந்தச் செயலணியில், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, காமினி வியாங்கொட, பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, விசாகா தர்மதாச, தர்மசிறி பண்டாரநாயக்க, கலாநிதி பர்ஸானா ஹனீபா, சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கம், மிராக் ரகீம், பேராசிரியர் தயா சோமசுந்தரம், கமீலா சமரசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.