சிறிலங்கா அதிபர், பிரதமரைத் தனித்தனியாகச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
முதலில் சிறிலங்கா பிரதமரை அலரி மாளிகையில் சந்தித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவது மற்றும் மனித உரிமைகளைக் காப்பதில் தற்போதுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தினார்.
அதையடுத்து, சிறிலங்கா அதிபர் செயலகத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகரும், கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோ, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா, சிறிலங்கா அதிபரின் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.