நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் சரத் பொன்சேகா
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் பதவியேற்றார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடிய போதே, சரத் பொன்சேகா பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன காலமானதால், ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தம்மை சுதந்திரமான குழுவாக அறிவிக்கக் கோரி, கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே, இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.