தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு
நாளை நடக்கவுள்ள சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அபேராம விகாரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச,
“இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காகவே தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தேசிய கீதம் ஒரே ஒரு மொழியில் மட்டும் தான் பாடப்பட வேண்டும். இரண்டு மூன்று மொழிகளில் பாடக் கூடாது.
இந்தியாவில் கூட பல மொழிகள் பேசப்பட்டாலும், தேசிய கீதம் ஒரே மொழியில் தான் பாடப்படுகிறது.
நாளை நடக்கவுள்ள சுதந்திர நாள் நிகழ்வுகளுக்கு அரசாங்கம் ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டுள்ள போதிலும், இதுவரை எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
எனினும், கூட்டு எதிர்க்கட்சி இந்த சுதந்திர நாள் நிகழ்வைப் புறக்கணிக்கவுள்ளது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டாலும், அதில் நாம் பங்கேற்கப் போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.