இந்தியாவுடனான உறவை எதிர்க்கும் நவீன பாசிசவாதிகள் – மங்கள சமரவீர
சிறிலங்காவில் உள்ள ‘நவீன பாசிசவாதிகள்’ தான் இந்தியாவுடனான நெருக்கமான உறவை எதிர்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற சிறிலங்கா-இந்திய சமூகத்தின்’ கருத்தரங்கில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவு கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
“தத்தமது இனம் மற்றும் மதம் போன்றவற்றை முதன்மைப்படுத்துகின்ற, தவறாக வழிநடத்தப்படுகின்ற பௌத்த சிங்களவர்கள் நவீன பாசிசவாதக் கருத்துடமைக்கு ஆட்பட்டுள்ளனர்.
சிறிலங்காவை விட இந்தியாவில் பௌத்தம் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றது என்பதை நினைத்து இவர்கள் மகிழ்ச்சியடையாது, அதனைத் தமக்கு எதிரான ஒன்றாக நோக்குகின்றனர்.
எமது இரு நாடுகளையும் பாக்குநீரிணையின் மூலம் ஒன்றிணைப்பதற்கான பாலம் ஒன்றை இடுகின்ற அந்த நாளுக்காக இந்தியர்கள் காத்திருப்பதாகவும், இந்தப் பாலத்தின் மூலம் சிறிலங்காவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி இதனைத் தமது தாய்நாடாக மாற்றுவதற்காக இந்தியர்கள் தக்க தருணத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் சிறிலங்காவில் உள்ள நவீன பாசிசவாதிகள் கருதுகின்றனர்.
வர்த்தக உடன்படிக்கைகளைக் கலந்துரையாடும் போது, இந்திய மருத்துவர்கள் மற்றும் ஏனையோர் சிறிலங்கா சந்தைகளில் இடம்பிடிப்பதற்கு முண்டியடிக்கிறார்கள் என்பதே நவீன பாசிசவாதிகளின் எண்ணமாகும்.
இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இராமேஸ்வரம், தமிழ்நாட்டை சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமன்னாருடன் இணைப்பதற்கான பாலம் மற்றும் சுரங்கப்பாதை போன்றவற்றை அமைத்தல் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைகள் தொடர்பில் ஒரு சில தரப்பினர் மத்தியில் பல்வேறு பிரதிபலிப்புக்கள் காணப்படுகின்றன.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கைகளை அரியதொரு வாய்ப்பாக இலங்கையர்கள் நோக்க வேண்டும்.
இந்தியாவானது பொருளாதார சக்தியாக மிளிர்வதற்கான நகர்வுகளில் ஈடுபட்டாலும் கூட, இதனைத் தனக்கான அச்சுறுத்தலாக சிறிலங்கா நோக்கக்கூடாது.
மாறாக சிறிலங்காவின் செழுமை மற்றும் அபிவிருத்திக்கான அற்புதமான வாய்ப்பாக இந்தியாவுடனான பொருளாதார உடன்பாடுகளை நவீன பாசிசவாதிகள் நோக்க வேண்டும்.
கனடா, ஹொங்கொங் அல்லது வியட்னாம் போன்றே நாங்களும் உலகின் மிகப்பாரிய மிகவிரைவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட அதாவது எமது நாட்டின் பொருளாதாரத்தின் முப்பது மடங்கு பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட இந்தியாவின் அயல்நாடாக சிறிலங்கா அமைந்துள்ளது என்பதை நினைத்து இலங்கையர்கள் பெருமை கொள்ள வேண்டும்.
இந்தியாவுடன் சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொண்ட பின்னர் பல்வேறு பொருளாதார நலன்களை அடைந்துள்ளது.
இதியாவிற்கான சிறிலங்காவின் ஏற்றுமதி 10 மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி இடைவெளிச் செயற்பாடானது சுதந்திர வர்த்தக உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள் 10:1 இலிருந்து 6:1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய நிறுவனங்களுக்காக 250 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல்களைக் கட்டுவதற்கான கட்டளைகளை கொழும்பு கப்பற் பட்டறை பெற்றுள்ளது.
இதேவேளையில், சாதாரண இலங்கையர்களின் தேவைகள், நம்பிக்கைகள் மற்றும் அவாக்கள் போன்றவற்றில் இந்தியா கவனம் எடுக்க வேண்டும்.
சிறிலங்காவின் வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது, ஆபத்தான சூழலியல் இழப்பீட்டையும் உண்டுபண்ணக் கூடிய சிறிலங்காவின் வடக்கில் நிலவும் ஆழ்கடல் இழுவை மீன்பிடி விவகாரம் போன்றன தொடர்பாக இந்திய கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.